3 சாட்டிலைட்களுடன் விண்ணில் பாயப்போகும் இந்திய ராக்கெட்
நாகர்கோவில்:
வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணில் பாயவிருக்கிறது பி.எஸ்.எல்.வி.-சி3 ராக்கெட்.
இந்த ராக்கெட்டின் மூலம் ஒரே நேரத்தில் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் 2,000 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திசாதனை படைத்தது இஸ்ரோ. இதன் அடுத்த கட்டமாக, கிரையோஜனிக் இஞ்சின்களையும் உள் நாட்டிலேயே தயாரித்து சோதனைசெய்வதில் இஸ்ரோ வெகு தீவிரமாக இருக்கிறது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வியின் அடுத்த ரக ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.-சி3, வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள்விண்ணில் ஏவப்படுவதற்குத் தயாராகி வருகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ராக்கெட்டின் 2வது மற்றும் 4வது கட்டங்களை ஒருங்கிணைக்கும் பணி மகேந்திரகிரி ராக்கெட் தளத்தில் நடைபெற்றுவருகிறது. 1வது மற்றும் 3வது கட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்து வருகின்றன. ஆகஸ்டுமாதத்திற்குள் 4 கட்டங்களையும் ஒருங்கிணைக்கும் பணி நிறைவு பெறும்.
அதற்குப் பின்னர், 950 கிலோ எடையுள்ள "டெஸ்ட் சாட்" என்ற இந்தியத் தொலையுணர்வு செயற்கைக் கோள், இந்த ராக்கெட்டில்பொருத்தப்பட்டு, விண்ணில் செலுத்தப்படும்.
இந்திய செயற்கைக் கோள் தவிர, 105 கிலோ எடை கொண்ட பெல்ஜியம் நாட்டின் செயற்கைக்கோளையும், 48 கிலோ எடைகொண்ட ஜெர்மனியின் செயற்கைக் கோள்களையும் பி.எஸ்.எல்.வி.-சி3 ராக்கெட் விண்ணில் செலுத்தவிருக்கிறது.