வீரப்பன் குறித்து விவரம் தராவிட்டால் வழக்கு: அதிர்ச்சியில் மலைப்பகுதி மக்கள்
மாதேஸ்வரன் மலை:
வீரப்பன் குறித்த விவரங்களை மறைக்கும் மலைவாசி கிராமத்தினர் மீது வழக்குத் தொடர அதிரடிப்படையினர்திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் அடுத்த கட்ட நடவடிக்கையில் அதிரடிப்படையினர் களம்இறங்கியுள்ளனர்.
வீரப்பனைத் தேடும் பணியில் போலீஸ் அதிகாரிகளும் மும்முரமாக இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக நடந்த தேடுதல்வேட்டைக்குப் பிறகு தற்போது மீண்டும் இரண்டாவது கட்ட வேட்டை துவங்கியுள்ளது.
முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கூட்டு அதிரடிப்படையின் தலைவர் தேவாரம், கர்நாடக அதிரடிப்படையின்ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றார்.
முதலில் மாதேஸ்வரன் மலையில் நடப்பதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், திடீரென கரட்டூர் முகாமில் நடந்தது.
காட்டுக்குள் இருக்கும் மலைவாசி மக்களை அதிரடிப்படையினர் சந்தித்து வீரப்பனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைவாசிகளிடம் அன்பாக அரவணைத்துப் பேசியே வீரப்பனைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவருகின்றனர்.
இங்குள்ள கிராம மக்களின் அடிப்படை வசதிகள், மற்றும் குறைகள் பற்றிய மனுக்களைத் தேவாரம் சேகரித்துள்ளார். இந்தபிரச்னைகளை தீர்க்க அரசிடம் பேசப் போவதாக தெரிவித்தாலும், வீரப்பனைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால் மட்டுமேஅந்த கிராமம், சிறப்பாக கவனிக்கப்படும் எனக் கூற அவர் தவறவில்லை.
ராஜ்குமாரை மீட்ட தூதர்கள் விசாரிக்கப்படுவார்களா?:
கொளத்தூர் மணியைக் கைது செய்ததன் மூலம், வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்ட அத்தனை பேரும் விசாரணைக்குஉட்படுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனுக்கு உதவியவர்கள், அவர்கள் எப்படி வீரப்பனுக்கு உதவினார்கள் என்பதுஉட்பட பல்வேறு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வீரப்பன் சென்ற வழியில் மலைவாசி மக்கள் அளித்த உதவிகள்பற்றியும் தீவிரமாக அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு விசாரிக்கப்படுவரிடமிருந்து போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், தகவல்கள் மறைக்கப்பட்டாலும்அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் அதிரடிப்படையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி வைத்தியம், தற்போது காட்டு வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.