கவர்னர் நீக்கம்: காங்கிரஸ் எதிர்ப்பு
டெல்லி:
தமிழக கவர்னர் பாத்திமா பீவி பதவிநீக்கம் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது.
தமிழக கவர்னர் பாத்திமா பீவி பதவிநீக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெய்ப்பால் ரெட்டி கூறுகையில்,
ஆளுனர் என்பது வெறும் அரசியல் சட்டப் பதவி தான். ஒரு மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் எந்த தலையீடும் செய்யமுடியாது.
மத்திய அரசு கேட்டபடி, தமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து மாநிலஅரசிடம் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளார் பாத்திமா பீவி. அங்கு கருணாநிதி மீது நடந்த தாக்குதல், போலீஸ் நடவடிக்கைகள்ஆகியவற்றி பாத்திமா பீவிக்கு எந்தப் பங்கும் இல்லை.
பாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு எடுத்தமுடிவு மிகவும் தவறான முடிவாகும் என்று கூறினார்.
இளங்கோவனும் எதிர்ப்பு:
இதே கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனும் ஆமோதித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில்கருணாநிதி கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் பிரதமருக்கு அறிக்கை அனுப்பிவைத்துள்ளார் கவர்னர்.
இந்நிலையில் கவர்னரை பதவிநீக்கம் செய்வது மிகவும் தவறு. இங்கு நடந்த சம்பவங்களுக்கு ஆளுநர் எப்படிப் பொறுப்பேற்கமுடியும் என்றார்.