சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட வீடியோ காட்சிகள்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் எடுத்துள்ள வீடியோ படக்காட்சியை சென்னை போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் ஞாயிற்றுக்கிழமை மாலை நிருபர்களிடம் போட்டுக் காண்பித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலீஸார் கைது செய்து, அடித்து இழுத்துச் செல்லப்பட்ட காட்சியை சன் டிவிவெளியிட்டது. இதில் கருணாநிதி, மத்திய அமைச்சர் மாறன் ஆகியோரைப் போலீஸார் தாக்கியது தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சிகள் நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
இந்நிலையில், கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீஸார் எடுத்த வீடியோ காட்சியை சென்னை போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் பத்திரிக்கை நிருபர்களுக்குப் போட்டுக் காண்பித்தார்.
சென்னை ஆலிவர் ரோட்டில் உள்ள கருணாநிதி இல்லத்தில் போலீஸார் நுழைவதிலிருந்து காட்சி ஆரம்பமாகிறது.
கருணாநிதி வீட்டுக்கதவைப் போலீஸார் தட்டுகின்றனர். அப்போது "யாருங்க அது?" என்ற பெண் குரல் கேட்கிறது. "ஐயாவைப்பார்க்க வேண்டும்" என்கின்றனர் போலீஸார். அப்போது, அந்தப் பெண்குரல் "எதுக்காக வந்தீங்க இந்த நேரத்துல?" என்றுகேட்கிறது.
"நீங்க முதல்ல ஐயாவைக் கூப்பிடுங்க" என்று கூறிக்கொண்டே போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் உள்ள கருணாநிதியின்படுக்கையறை வரை செல்கின்றனர்.
அப்போது, படுக்கையறையிலிருந்து ராஜாத்தி அம்மாள் வெளியே வருகிறார். "கொஞ்சம் வெளியே இருங்க" என்றுபோலீஸாரிடம் கூறிவிட்டு, மீண்டும் படுக்கையறைக்குள் சென்று "போலீஸ்காரங்க வந்திருக்காங்க" என்று கூறுவதும் கேட்கிறது.
அப்போது கேமிரா கருணாநிதியின் படுக்கையறையைக் காண்பிக்கிறது. அங்கு கருணாநிதி லுங்கி, பனியனுடன்அமர்ந்திருக்கிறார்.
"எதுக்கு வந்து இருக்கீங்க?" என்கிறார் கருணாநிதி.
"உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்" என்கின்றனர் போலீஸார்.
"எதுக்காக?" என்று கருணாநிதி கேட்டவுடன், "மேம்பால ஊழல் வழக்கிற்காக" என்கின்றனர்.
"அதுக்கு இந்த நேரத்துலயா வருவது? இப்ப என்னங்க மணி? என்ற ராஜாத்தியம்மாள் போலீஸாரைப் பார்த்துக் கேட்கிறார்.
"அவங்களுக்கு அரஸ்ட் பண்ணனும்னு ஆசை. அதுக்காக வந்திருக்காங்க. சரி கோபாலபுரம் வீட்டுக்குப் போய் விட்டு வரலாமா?"என்று கேட்கிறார் கருணாநிதி.
போலீஸார் மெளனம் சாதிக்கவே, "கோபாலபுரம் வீட்டுக்குப் போய்விட்டு வரலாமா?" என்று மீண்டும் கேட்கிறார் கருணாநிதி.
"எங்க வண்டியிலேயே போலாம்" என்கின்றனர் போலீஸார். அதற்கு கருணாநிதி "இல்லை என் வண்டியிலேயே வரேன்" என்கிறார்.
அதன்பிறகு, சட்டை, லுங்கி, மஞ்சள் துண்டு அணிந்து கொண்டு கருணாநிதி வரும் காட்சி காட்டப்படுகிறது. பிறகு டாய்லெட்அறைக்குள் போவதும் காட்டப்படுகிறது.
அதன்பிறகு படிக்கட்டு வழியாக அவர் ஹாலுக்கு வருகிறார். அந்த நேரத்தில் முரசொலி மாறன் தன் குடும்பத்துடன் கருணாநிதிவீட்டுக்குள் நுழைகிறார்.