எல்லையில் இந்திய-பாக். துப்பாக்கி சண்டை
ஜம்மூ:
டெல்லியில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும் பேச்சுவார்த்தையில் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் சனிக்கிழமை காஷ்மீர் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் துப்பாக்கிச் சண்டையில்ஈடுபட்டன.
சனிக்கிழமை காஷ்மீரின் ரஜவரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியராணுவத்தினரை நோக்கி மெஷின் கன்களால் சுட்டனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சுட்டுக் கொல்வது சகஜம் தான் என்றாலும், வாஜ்பாயும் முஷாரபும் மிக உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது நடந்துள்ள இந்த மோதல் பெரும் ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் தான் இந்தத் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம்-தீவிரவாதிகள் சண்டை:
அதே போல தெற்கு காஷ்மீரில் ராணுவத்தினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராணுவத்தினர் அவர்கள் மீது திருப்பிச் சுட்டனர். இரு தரப்பிலும் பலத்த துப்பாக்கி சண்டை நடந்தது.தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 வயது சிறுமியும் மற்றொரு நபரும் இறந்தனர்.
ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் அருகாமைக் காட்டுப் பகுதியில் புகுந்து தப்பிவிட்டனர்.
வாஜ்பாய்- முஷாரப் பேச்சுவார்த்தையை பல தீவிரவாத அமைப்புகள் எதிர்த்து வருகின்றன என்பது முக்கியமானது.