உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பில்லை: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தி.மு.கவையும் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாதது தி.மு.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் எனக்கு வரவில்லை. அரசியல் கட்சிகளை இந்த வழக்கில் சேர்த்து அரசியல் சாயம்பூசவேண்டாம் என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். இது தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை.
எனக்கு பாதுகாப்பு தருமாறு மத்திய அரசிடம் நான் கேட்கவில்லை. மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும்,டி.ஆர். பாலுவும் கேட்டிருக்க்ககூடும்.
நான் கைது செய்யப்பட்டபோது, போலீசார் நடந்து கொண்ட விதத்திற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக, என்னைத் திருப்திபடுத்த மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கிறதுஎன கூறப்பட்டுவருகிறது. இது போன்ற கேள்விக்கெல்லாம் நான் பதில் கூறவிரும்பவில்லை.
தி.மு.க. கேட்டுக் கொண்டது போல் அ.தி.மு.க. அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்தும்நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
சென்னை நகர மேயர் ஸ்டாலினின் நண்பர் தற்கொலை செய்து கொண்ட போது எழுதிய கடிதத்தின் பின்னணியில்யாரோ இருக்கிறார்கள் என போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார். அவருக்குப் பின்னால் யார்இருக்கிறார்கள் என எனக்குத் தெரியும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.