சென்னை: ஈவ் டீசிங் செய்த 17 பேர் கைது
சென்னை:
சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் ஈவ்டீசிங் செய்த 17 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரிகா ஷா என்ற மாணவி, ஈவ் டீசிங்கிற்குக் கொடூரமாகப் பலியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில், சில மகளிர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் முன், மாணவிகளைக் கேலி செய்வதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தென் சென்னை இணைக் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், மாறுவேடத்தில் மகளிர் கல்லூரிகளுக்குச் சென்று கவனிக்க ஆரம்பித்தனர்.
அப்போது, மாணவிகளைக் கிண்டல் செய்த 17 இளைஞர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர் போலீசார். இவர்கள் அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை-தண்டையார்பேட்டையில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகளை, அவர்களுக்குத் தெரியாமல் போட்டோ எடுத்து, பின்னர் அந்தப்பெண்களிடமே அந்தப் போட்டோக்களைக் காட்டி கேலி செய்ததற்காக கடந்த வாரம்தான் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.