கோபி அன்னானுக்கு தலித்கள் எதிர்ப்பு
டர்பன்:
நிறவெறிக்கு எதிரான மாநாட்டில், ஜாதி பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்கு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்குஎதிராக இந்தியாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் நிறவெறியை ஒழிப்பது குறித்து அனைத்துத் தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்கள்.
இந்த மாநாட்டின்போது, இந்தியாவில்-குறிப்பாக தமிழகத்தில்-தலித்களுக்கு இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள்பற்றி விவாதிப்பதை மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தலித்கள் கோருகிறார்கள்.
ஆனால், இதற்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. நிறவெறியையும் ஜாதிக் கொடுமையையும் ஒன்றாகபார்க்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தியா கூறியுள்ளது.
இதையடுத்து ஜாதிப் பிரச்சனைகளையும், நிறவெறியையும் ஒன்றாக கருத முடியாது என்று கூறிய கோபி அன்னான்,தலித்களின் வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
இந்நிலையில், டர்பன் நகருக்கு வந்திருந்த கோபி அன்னானுக்கு எதிராக, அம்பேத்கரின் மகனும் இந்திய குடியரசுக்கட்சியின் எம்.பியுமான பிரகாஷ் அம்பேத்கார் தலைமையில், சுமார் 200 பேர் கூடி நின்று, கோஷம்எழுப்பினார்கள்.
"நிறவெறியையும், ஜாதி வெறியையும் பிரித்துப் பார்க்காதே. மாநாட்டில் ஜாதிக் கொடுமை பற்றிப் பேச அனுமதிகொடு" என்று அவர்கள் கோஷமிட்டனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இயக்கமான "மக்கள் விடுதலைக் கல்வி இயக்கம்"என்ற அமைப்பின் தலைவர் வின்சென்ட் மனோகர் என்பவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கோஷம் எழுப்பப்பட்ட போது, பிரகாஷ் அம்பேத்காருக்கும் கோபி அன்னானுக்கும் வாக்குவாதம் எதுவும்நடைபெறவில்லை.
இதுகுறித்து கோபி அன்னான் கூறுகையில், "ஜாதீய அடிப்படையில் மக்கள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும்" என்றார்.
ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், ஜாதிக்கொடுமை பற்றி பேசுவதற்கு இடமளிப்பது குறித்து அன்னான் வாயேதிறக்கவில்லை. அதற்கான எந்தவித உத்திரவாதத்தையும் அவர் கொடுக்கவில்லை.