"நக்கீரன்" ஆசிரியருக்கு கொலை மிரட்டல்
சென்னை:
"நக்கீரன்" இதழ் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
பலமுறை வீரப்பனை காட்டில் சந்தித்து பேட்டி எடுத்தவர். பலரை வீரப்பன் கடத்திச் சென்றபோதேல்லாம் அரசுத்தூதராகச் சென்று வீரப்பனிடம் பேசி பணயக் கைதிகளை மீட்டுள்ளார். சமீபத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை,வீரப்பன் கடத்திச் சென்ற போது தமிழக அரசின் தூதுவராக காட்டுக்குள் சென்றவர்.
ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது இவரது அலுவலகம் தாக்கப்பட்டது. 2 ஊழியர்கள்கொல்லப்பட்டனர்.
இப்போது மீண்டும் தனது வீட்டிற்கு ஒரு கும்பல் வந்து கொலை மிரட்டல் விட்டுச் சென்றுள்ளதாக புகார்கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்த இதழின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் எங்கள் ஆசிரியர் கோபாலின் வீட்டிற்கு வந்துள்ளது.அவர்களில் சிலர் "யூனிபார்ம்" அணிந்து இருந்தார்கள்.
வீட்டிற்குள் திபுதிபுவென நுழைந்த அந்தக் கும்பல் கோபால் எங்கே என்று வீட்டில் உள்ளவர்களை மிரட்டிக்கேட்டுள்ளது.
மேலும் கோபால் எங்கெங்கு செல்வார் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு வாசலில் காவலுக்கு இருந்த செக்யூரிடியிடம், கோபால் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிக்கூறுமாறு மிரட்டிக் கேட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, எங்கள் ஆசிரியிர் இதுகுறித்துப் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் கடந்த சில வாரங்களாக தமிழக போலீசாரின் நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் எங்கள் இதழில்வெளியிட்டு வரும் தொடருக்கும், இந்த மிரட்டலுக்கும் சம்பந்தம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இது குறித்து பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு காமராஜ்கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, காவல் துறைக்கும் இந்த மிரட்டலுக்கும் எந்தவித சம்பந்தமும்இல்லை. இருப்பினும் நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்கள்.