தமாகாவைக் கைப்பற்ற சிதம்பரத்தின் "மெகா" திட்டம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்ற தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் மெகா சைஸில் திட்டமிட்டுவருகிறார்.
மூப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனிக் கட்சி கண்டாலும் கூட தமாகா மீதும், மூப்பனார் மீதும் தனி மரியாதை வைத்திருந்தவர் ப.சிதம்பரம்.தற்போது மூப்பனார் இல்லாத நிலை, சிதம்பரத்துக்கு பெருத்த மன வேதனையைத் தந்துள்ளது.
தற்போது தமாகா அழிந்து போய் விடாமல் பார்த்துக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கட்சியில் மூப்பனாரைத் தவிர வேறுதலைவர் இல்லை, கோவிந்தவாசன்தான் தலைவர் என்று கட்சியினர் முடிவெடுத்திருப்பதையும் அவர் விரும்பவில்லை.
மூப்பனாருடைய மகன் என்ற வகையில், கோவிந்தவாசன் மீது அவருக்கு தனி மரியாதை உண்டு. ஆனால் திடீரென கட்சியின் தலைவராக கோவிந்தவாசன்தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து அவர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
கோவிந்தவாசனால் கட்சியை நடத்த முடியாது என்று அவர் நினைக்கிறார். எனவே தமாகாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிதம்பரம்திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக தமாகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறும், தனது அடுத்த உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளுமாறும்கேட்டுக் கொண்டுள்ளார்.
தமாகவிலிருந்து விரைவில் பல தலைவர்கள் வெளியேறலாம் என்று சிதம்பரம் நினைக்கிறார். "யாரெல்லாம் வெளியேறுகிறார்களோவெளியேறட்டும். நமது நேரம் வரும்போது, கட்சியை கைப்பற்றுவோம்" என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளாராம் சிதம்பரம்.
மூப்பனார் காட்டிய வழியில், ஊழலற்ற, நேர்மையான அரசியலை நடத்த சிதம்பரம் சூளுரைத்துள்ளாராம். மூப்பனார் கனவு கண்ட "காமராஜர் ஆட்சி"என்ற மிகப் பெரிய லட்சியத்தை கிட்டத்தட்ட காங்கிரஸாரும், தமாகவினரும் அடியோடு மறந்து விட்டதை நினைத்து அவர் வேதனைப்படுகிறாராம்.
எனவே இப்போதைக்கு சிதம்பரம் அமைதியாக இருப்பது, விரைவில் பாய்வதற்குத்தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.