மக்கள் தீர்ப்பை ஆளுநர் ஏற்றால் சட்டம் எதற்கு? - நீதிபதிகள் பெஞ்ச்
டெல்லி:
"மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான், ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி,முதல்வராகப் பதவியில் அமர்த்தினார் என்றால், சட்டங்கள் எல்லாம் எதற்கு?" என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன பெஞ்ச் கேள்விக் கணை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் வேணுகோபால் தன்னுடைய வாதத்தில்,
"தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும், ஜெயலலிதாவின் தலைமையை மக்கள் விரும்பினார்கள். அதன்எதிரொலியாகவே, கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
அதிமுக வெற்றி பெற்றால், ஜெயலலிதாதான் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது. அதை மனதில் கொண்டு,மக்களும் தங்களுடைய தீர்ப்பை வழங்கி, அதிமுகவை வெற்றி பெறச் செய்தனர்.
மக்களுடைய இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், அப்போதைய ஆளுநர் ஜெயலலிதாவையேமுதல்வராக்கினார். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துள்ளார் ஆளுநர். இதில் தவறு ஒன்றும் இல்லை.
மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை இறுதியானது அல்ல. தனி நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். அது தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அவர் தண்டனை பெற்றவர் என்று கூறுவது சரியல்ல. அதனால், இதைக் காரணமாக வைத்துஜெயலலிதா முதல்வர் பதவியைத் தொடரக் கூடாது என்று கூற முடியாது.
தவிர, பதவி ஏற்ற 6 மாதங்கள் வரை ஒருவர் முதல்வர் பதவியிலோ அல்லது மந்திரி பதவியிலோ நீடிப்பதற்குச்சட்டத்தில் இடமுள்ளது.
அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா பதவி ஏற்று இன்னும் 6 மாதம் ஆகாத நிலையில், அவரைப் பதவியில்இருந்து இறக்க முடியாது" என்று கூறி வாதாடினார் வேணுகோபால்.
அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் பெஞ்ச், "மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்துதான் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்றால், நாட்டில் சட்டங்கள் எதற்கு உள்ளன?" என்று கூறியது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஜெயலலிதா தரப்பிலான வாதத்தை வேணுகோபால் நாளையும்தொடர்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பெஞ்ச் கேட்ட கேள்விகளுக்கு, அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அடுத்தசெவ்வாய்க்கிழமைதான் பதில் அளிப்பார் என்று தெரிகிறது.