பாத்திமா பீவி மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கொச்சி:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராக நியமித்து அரசியல் சட்டத்துக்கு எதிராகசெயல்பட்ட முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்குகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோஷி தாமஸ், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு இது தொடர்பான மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவின் நகலை இன்று தாமஸ் நிருபர்களிடம் அளித்தார்.அதில் தாமஸ் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றமே ரத்து செய்த பின்னரும் கூட, தான் செய்தது சரி தான் என பாத்திமாபீவி கூறியுள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் இப்படிக் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதற்காக ஜெயலலிதாவை அவர் முதல்வராக நியமித்தார் என்பது குறித்தும் அதில் ஏதாவது பின்னணி விவகாரங்கள் உள்ளதுஎன்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.