ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை
தெஹ்ரான்:
அமெரிக்க போர் விமானங்கள் தனது வான் வெளி மீது பறக்கக் கூடாது என ஈரான் தடை விதித்துள்ளது. மீறி பறந்தால் அந்தவிமானங்களை தாக்குவோம் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல்களில் இருந்தும், குவைத், சவுதி அரேபியா ஆகிய இடங்களில்உள்ள தனது தளங்களில் இருந்தும் போர் விமானங்களை இயக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இங்கிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் விமானங்கள் ஈரான் வழியாகத் தான் பறந்தாக வேண்டும். இப்போது பல உளவுவிமானங்களை ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பறக்க விட்டுள்ளது. இந்த விமானங்கள் ஈரான் வான்வெளி வழியாகத் தான்பறந்து செல்கின்றன.
இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஈரானின் மூத்த ராணுவ அதிகாரிகளில் ஒருவரான ரியர் அட்மிரல் அலிஷம்கானி கூறுகையில், தெரியாமல் ஈரான் வான்வெளியில் வந்துவிட்டதாக இதைக் கருத முடியாது. திட்டமிட்டுத் தான் ஈரான் மீதுபறக்கின்றனர். இதை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
ஈராக் மீதான தாக்குதல் நடத்தியபோது கூட அமெரிக்க விமானங்களும், ஏவுகணைகளும் ஈரான் வான் எல்லையை மீறன.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தப் பகுதியில் அமெரிக்கா தனதுபடைகளைக் குவிப்பது தேவையில்லாத கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நாங்கள் தலிபான்களை எதிர்க்கிறோம். தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் எதிர்ப் படையினருக்குஆயுதங்கள் கொடுத்து வருகிறோம். தொடர்ந்து அவர்களுக்கு உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் இருந்ததனது தூதரகத்தைக் கூட அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன் மூடிவிட்டது. இப்போது ஈரானின் ஆதரவுக்காக அமெரிக்காதொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவை ஆதரிக்க ஈரான் தயாராக இல்லை.