உடைந்தது புதிய நீதிக் கட்சி
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சுத்தானந்தம் அக்கட்சியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில்சேர்ந்தார். அவருடன் ஏராளமான புதிய நீதிக் கட்சியினரும் அதிமுகவில் இணைந்தனர்.
புதிய நீதிக் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலையொட்டி பிறந்த கட்சி. முதலியார் மற்றும் பிள்ளைமார் சமூக வாக்குகளை மனதில்கொண்டு உதித்த கட்சி இது. ஆனால் இந்தக் கட்சியை சட்டசபைத் தேர்தலில் மக்கள் அடியோடு நிராகரித்து விட்டனர். இவர்கள்மட்டுமல்லாது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிற கட்சிகளையும் மக்கள் வெறுத்து, ஒதுக்கி விட்டனர்.
சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோதே, புதியநீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கும்,துணைத் தலைவர் சுத்தானந்தத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அவர்களைசமாதானப்படுத்தி வைத்தனர்.
இந்த நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, திமுகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாக ராமதாஸ் ஸ்டைலில் தடாலடி அறிக்கைகொடுத்தார் ஏ.சி.சண்முகம். அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.
பின்னர்சில நாட்கள் கழித்து அதிமுக எங்களைக் கண்டுகொள்ளவில்லை. எனவே தனித்துப் போட்டியிடுவோம் என்றார். ஆனால்திடீரென காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்று அறிவித்தார் ஏ.சி.சண்முகம். இந்தமுடிவுகள் அனைத்தும் அவராகவே எடுத்த முடிவு என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நிமிடத்திற்கு நிமிடம் சண்முகம் முடிவுகள் எடுப்பதும், அதை மாற்றுவதும் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை அளித்தது.இதையடுத்து சுத்தானந்தம் தலைமையில் ஒரு குழுவினர் கட்சியை விட்டு விலக முடிவு செய்தனர்.
சுத்தானந்தம் தலைமையில், மதுரை முன்னாள் மேயர் முத்துவின் மகன் நல்லதம்பி, நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பல நிர்வாகிகள்ஜெயலலிதாவை திங்கள்கிழமை மாலை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
விரைவிலேயே புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த வேறு பல நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று கூறப்படுகிறது.