வல்லம் அதிமுக வேட்பாளர் சாலை விபத்தில் மரணம்
விழுப்புரம்:
வல்லம் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில்போட்டியிடுபவர் சேகர். இவர் அந்த ஒன்றியத்தின் 10 வார்டுக்குப் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த 5ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து,பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து செஞ்சி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர் இறந்துவிட்டதால் அந்த வார்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.