ஒரு நாளுக்கு முன்னரே தேர்தல் பணியாளர்கள் ஓட்டுப் போடலாம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு பணியாளர்கள் தங்கள் ஓட்டுக்களைவாக்குப்பதிவு நாளுக்கு ஒரு நாள் முன்பே பதிவுசெய்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவி நடைபெறுகிறது.
இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் இதுவரை தேர்தல்முடிந்தபின்பு தங்கள் ஓட்டைத் தபால் மூலம் போட்டுவந்தார்கள்.
இந்தமுறை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே இவர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவுசெய்துகொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சென்று தேர்தல் பணியாளாராக தான் நியமிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளஅட்டையைக் கொடுத்து, வாக்குச்சீட்டைப் பெற்று அதில் ஓட்டைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
அவர் பெயர் இடம்பெற்றுள்ள பட்டியலில் அவரது ஓட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான முத்திரைகுத்தப்பட்டுவிடும். எனவே யாரும் இவரது ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போடமுடியாது.