இலங்கை இன மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 மில்லியன் டாலர் உதவி
மணிலா:
விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.
இலங்கை ராணுவ தரப்பிலும், விடுதலை புலிகள் தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்களின் இழப்பை சரி கட்டி, சீரமைக்க 25 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடனாகபெற்றுள்ளது. இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் சண்டை காரணமாக 8,00,000 பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு உதவும் விதமாக 5 ஆண்டு கால திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு வீட்டு வசதி போன்ற அடிப்படை உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கூட இலங்கைக்கு உதவமுன் வந்துள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கியுள்ள கடன் 32 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் கடனுக்கான வட்டி 1 சதவிகிதமாக இருக்கும்.
அதன் பின்னும் கடன் தொகையை செலுத்துவதற்கு 8 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படும். அப்போது வட்டி 1.5சதவிகிதமாக உயர்த்தப்படும்.