எம்.ஜி.ஆர். கழகத்தின் 7வது ஆண்டு விழா
சென்னை:
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் கட்சிக்குபுதன்கிழமை 7வது வயது பிறந்தது.
ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு கொண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவக்கினார். இந்தக் கட்சிக்கு புதன்கிழமை 7வது வயது பிறந்தது.
இதையொட்டி கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆர்.எம்.வீரப்பன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடந்து முடிந்த முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதை வன்முறைச்சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கட்சி பொதுச் செயலாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.