ஒரிஸ்ஸாவிலும் ஆந்த்ராக்ஸ்
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் தபாலைப் பிரித்தவுடன் மயங்கி விழுந்ததை அடுத்து,அந்தப் பகுதியில் ஆந்த்ராக்ஸ் பீதி பரவியுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு,
ஒரிஸ்ஸா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள துளசிப்பூர் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் மதன் சாகுஎன்பவரின் 13 வயது மகள் பானுமதி.
வெள்ளிக்கிழமை மதன் சாகுவுக்கு அஹமத் நகரில் ராணுவ வீரராகப் பணியாற்றும் அவரது அக்காள் மகன்ஒருவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. மதன் சாகு அந்தக் கடிதத்தை வாங்கி அருகில் இருந்த தனது மகள்பானுமதியிடம் பிரிக்கச் சொன்னார்.
கடிதத்தைப் பிரித்தவுடன் அதில் இருந்த வெள்ளை நிற பொருளை நுகர்ந்ததால் பானுமதியும், அவரது அருகில்நின்றுகொண்டிருந்த மற்றொரு சிறுவனும் மயங்கி விழுந்துவிட்டனர். மேலும் அவர்கள் சுயநினைவையும்இழந்தனர்.
இதையடுத்து கடிதத்தில் வந்தது ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமியாக இருக்கலாம் என்று அஞ்சிய மதன் சாகு, அவர்கள் 2பேரையும் ஜஜ்பூர் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு, சுயநினைவைப் பெற்றார்கள்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து,அந்தக் கடிதத்தில் இருந்த வெள்ளை நிறப் பொருளைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை நுகர்ந்து பார்த்தால் எல்லாம் மயக்கம் வராது என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.அப்படியே இந்த வெள்ளைப் பெளடரில் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா இருந்திருந்தாலும் அதன் காரணமாக மயக்கம்வந்திருக்க வாய்ப்பில்லை. பெளடரில் இருந்த வேறு பொருள் தான் மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.