ஜெ. க்கு கொலை மிரட்டல்: புதுவையில் போலீஸ் விசாரணை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இண்டர்நெட் சென்டரில் இருந்து இ-மெயில் மூலம் தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவைக் கொலைசெய்யப் போவதாக மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவர் நீதிமன்றத்துக்கு வரும்போது கொலை செய்வோம் என்று,தமிழ்நாடு விடுதலைப்படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இ-மெயிலில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மிரட்டல் விடுத்தவர்களைக்கண்டுபிடிக்கும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரியில் நெல்லித்தொப்பு உள்ள ஒரு இண்டர்நெட் சென்டரில் போலீசார் தீவிரவிசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த சென்டரில் இருந்துதான் அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு ஒரு மெயில்அனுப்பப்பட்டது. அதில் ஆப்கான் மீது போர் தொடுப்பதை, அமெரிக்கா உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும்,இல்லையென்றால் புஷ்ஷை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவைக் கொலை செய்யப் போவதாக மெயில் அனுப்பியவர்களுக்கும், அமெரிக்காவுக்கு மெயில்அனுப்பியவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
இந்த இன்டர்நெட் சென்டருக்கு வந்து செல்பவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
மேலும் பாண்டிச்சேரியில் உள்ள பல்வேறு இன்டர்நெட் சென்டர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பற்றியதகவல்களை ஒரு ரெஜிஸ்டர் மூலம் சேகரிக்க வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தவிர, இது குறித்த போலீசாரின் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றும் அனைத்து இன்டர்நெட் சென்டர்களிலும்ஒட்டப்பட வேண்டும் என்று பாண்டிச்சேரி போலீஸ் அதிகாரி எஸ். சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.