அருப்புக்கோட்டையில் போலீஸ்காரர் வெட்டிக் கொலை: கலவரக் கும்பல் வெறிச் செயல்
அருப்புக்கோட்டை:
கோஷ்டி கலவரத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் செய்தவர்களைக் கலைக்கமுயன்ற போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் ஒரு போலீஸ்காரர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் நடந்து முடிந்தஉள்ளாட்சித் தேர்தலின் போது 2 கோஷ்களுக்கிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.
போலீசார் இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ஒரு கோஷ்டியினரை மட்டும் கைது செய்தனர். இதனால் வெறுப்பானஅந்தக் கோஷ்டியின் ஆதரவாளர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் சாலை மறியல்செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர்.ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. எனவே மறியல் செய்பவர்களை எச்சரிக்க வானத்தை நோக்கிப்போலீசார் துப்பாக்கியால் சுட முயன்றனர்.
இதைக்கண்டு ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் போலீசார் மீதும், போலீசாரின் வாகனங்கள் மீதும் கடும் தாக்குதல்நடத்தினர். பயங்கர ஆயுதங்களால் போலீசாரைத் தாக்கினர். வந்திருந்த போலீசாரின் எண்ணிக்கை மிகக்குறைவாகஇருந்ததால் அவர்களால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தக் கலவரத்தில் போலீஸ் ஏட்டு முருகன், ஆயுதப்படை போலீசார் தேவராஸ், இன்ஸ்பெக்டர் ஷாஜஹான்ஆகியோர் படுகாயமடைந்தனர். பல போலீசாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் போலீஸ் ஏட்டு முருகன் பரிதாபமாகஉயிரிழந்தார். மேலும் போலீஸ்காரர் தேவராஜ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.