புகையிலை கிடங்குகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் தடை
சென்னை:
புகையிலை சேமிப்புக் கிடங்குகளுக்கு தமிழக அரசு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகியவற்றை விற்கவோ, வாங்கவோ, சேமிக்கவோ கூடாது என்று தடைவிதித்தது. கடந்த 19ம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் வாயில் போட்டு மெல்லும் புகையிலைக்குத் தடை விதித்தது தவறு என்று கூறி புகையிலை தயாரிப்பு தொழிலகங்களின்அதிபர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில் மத்திய அரசு மெல்லும் புகையிலைக்கு கலால் வரிவசூலிக்கிறது. எனவே இது உணவுப் பொருள் சட்டத்தின் கீழ் வருவதல்ல. மேலும் தரச் சான்றிதழும் இதற்கு அளிக்கப்படுகிறது.
மாநில அரசு மெல்லும் புகையிலைக்குத் தடை விதிக்க அதிகாரம் கிடையாது. மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது இது. எனவேமெல்லும் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்குவைக்கப்பட்டு சீல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சண்முகம், மனுதாரர்களின் புகையிலை சேமிப்புக் கிடங்குகளுக்கு வைத்த சீல் உடனடியாக அகற்றப்படவேண்டும். இனிமேலும் சீல் வைக்கக்கூடாது. இருப்பினும் புகையிலையை விற்பதற்கு தடை தொடருகிறது என்று உத்தரவிட்டார் அவர்.