ஐ.சி.சி. உத்தரவை மீறி இந்திய அணியில் சேவாக்
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்க உள்ள இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வீரேந்திரசேவாக் இடம்பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டின்போது விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக,ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் சேவாக் விளையாடக் கூடாது என்று நடுவர் மைக் டென்னஸ் தடைவிதித்திருந்தார்.
பஞ்சாப்பில் உள்ள மொஹாலியில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில்தான் அவர் இடம் பெறக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) அறிவித்து விட்டது.
இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் போர்டு வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்என்றும் ஐ.சி.சி. காலக்கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் மொஹாலி டெஸ்டில் 14 வீரர்களில் ஒருவராக சேவாக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
கடந்த 23ம் தேதி துவங்கிய தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்டில் விளையாடாததன் மூலமாக,தண்டனையை அனுபவித்துவிட்டார் சேவாக். அதனால் அவர் இந்த மொஹாலி டெஸ்ட் போட்டியில்விளையாடுவதில் தவறில்லை என்றும் இந்திய கிரிக்கெட் போர்டு விளக்கமளித்துள்ளது.
ஆனால் சர்ச்சைக்குரிய அந்த மூன்றாவது டெஸ்டை ஐ.சி.சி. அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால்தான் மொஹாலி டெஸ்ட்டிற்கு சேவாக்கைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஐ.சி.சி. அறிவித்தது.
இந்நிலையில் மொஹாலி டெஸ்ட்டுக்கு சேவாக் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், இந்தப் போட்டியையும்ஐ.சி.சி. அங்கீகரிக்காமல் போவதற்கு 99.99 சதவீதம் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தங்கள் சுற்றுப் பயணத்தையே ரத்து செய்யலாம் என்றும்கூறப்படுகிறது.