சென்னை நக்கீரன் அலுவலகத்தில் கர்நாடக போலீஸ் சோதனை
சென்னை:
நக்கீரன் கோபாலைக் கைது செய்ய கர்நாடக அதிரடிப்படை போலீஸார் சென்னையில்தான் முகாமிட்டுள்ளனர். நக்கீரன் கோபாலைத் தேடிஅவரது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர். ஆனால் கோபால் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்பி விட்டார்.
கர்நாடக போலீஸ் படை வந்திருப்பது தனக்குத் தெரியாது என தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் நிருபர்களிடம் கூறினார். ஆனால், இந்தவிஷயத்தில் தமிழக போலீஸ் முழு உண்மையையும் வெளியிட மறுப்பதாகத் தெரிகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு, மீட்கப்பட்டு வெகு நாட்களாகிறது.
இந் நிலையில் ஆள் கடத்தல் வேலையை கர்நாடக அதிரடிப்படை எடுத்துக் கொண்டுள்ளது. தமிழக நிருபர்களை கடத்தி அதன் மூலம்வீரப்பனைப் பிடிக்கத் துப்பு கிடைக்கிறதா என்று அவர்கள் பார்ப்பதாகத் தெரிகிறது. எப்போதும் அதிமுகவுக்கும் நக்கீரனுக்கும் ஒத்துவந்ததில்லை. எனவே, கோபாலையும் அவரது நிருபர்களையும் கர்நாடக போலீசைவிட்டு அரசு நெருக்கி வருவதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் கர்நாடக அதிரடிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு வீரப்பனைத்தாக்கி விட்டு காட்டிலிருந்து தப்பிய நாகப்பா என்ற ராஜ்குமாரின் உதவியாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் அளித்தவாக்குமூலத்தில் நக்கீரன் கோபால்தான் ராஜ்குமார் கடத்தலுக்குக் காரணம் என்று கூறினார்.
இதையடுத்து நக்கீரன் கோபாலைக் கைது செய்ய கர்நாடகம் முடிவு செய்தது. இதற்கு கர்நாடக முதல்வரும் ஒப்புதல் அளித்து விட்டார் என்றுகூறப்பட்டது. கர்நாடக அதிரடிப்படை போலீஸாரும் சென்னைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை தமிழக டிஜிபிநெய்ல்வால் மறுத்தார். ஆனால் கர்நாடக போலீஸார் சென்னை வந்துள்ளனர் என்பது நிச்சயமாகியுள்ளது.
கர்நாடக அதிரடிப்படையைச் சேர்ந்த ஒரு எஸ்.பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 4 கான்ஸ்டபிள்கள் சென்னை வந்துள்ளதாகத்தெரிகிறது. இவர்கள் புதன்கிழமை காலை நக்கீரன் கோபாலின் கீழ்ப்பாக்கம் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்தவர்களிடம் கோபால்குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் வீட்டில் கோபால் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நக்கீரன் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கும் கோபால் இல்லை என்று நக்கீரன் அலுவலகத்தில் இருந்தவர்கள்தெரிவித்துள்ளனர். இதையடுத்து அலுவலகத்தில் இருந்தவர்களிடம் ஒரு நோட்டீஸை கர்நாடக போலீஸார் கொடுத்தனர்.
அதில், வீரப்பன் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் எங்களிடம் ஆஜராக வேண்டும் என கர்நாடக அதிரடிப் படைபோலீசார் கூறியுள்ளனர்.
கர்நாடக போலீஸ் வருகையை உணர்ந்த கோபால் அவர்கள் பிடியில் சிக்காமல் இருக்க வேறு இடத்திற்குச் சென்று விட்டார் என்றுகூறப்படுகிறது. அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. முன்ஜாமீன் கோரி அவர் மனு செய்யலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கோபாலைக் கைது செய்வதில் கர்நாடகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கோபாலை கைது செய்வதன் மூலம் ராஜ்குமார்கடத்தல் நாடகத்தின் பின்னணி மற்றும் வீரப்பனின் மறைவிடம், அவனது பலம், அவனுடன் யார் இருக்கிறார்கள் என்ற விவரங்களை கறந்துவிடலாம் என்று கர்நாடக போலீஸார் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களது பிடியில் கோபால் சிக்குவாரா என்பது தெரியவில்லை.