நக்கீரன் நிருபர் கைது: உண்மை நிலையை கண்டறிய குழு- நிருபர்கள் முடிவு
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டது குறித்த உண்மை நிலையைத் தெரிந்து கொள்வதற்காககுழு ஒன்றை அமைப்பது குறித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த நிருபர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 20ம் தேதி வீட்டை விட்டுக் கிளம்பிய சிவசுப்பிரமணியன், திடீரென்று காணாமல் போய்விட்டதாகஅவருடைய மனைவி ஜெயந்தி புகார் செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகப் போலீசார் அவரைக் கைது செய்திருப்பதாக மறுநாள் தெரிய வந்தது. கர்நாடகப் போலீசார்அவரைக் கடத்திக் கொண்டு சென்று கைது செய்ததாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து பல குழப்பங்கள் இரு மாநிலங்களிலும் நிலவி வந்தன. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டவழக்கில் வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்த காரணத்திற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்படலாம்என்ற அளவுக்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே நக்கீரன் நிருபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னையில் நிருபர்கள் கடந்த வாரம்போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நக்கீரன் நிருபரின் கைது குறித்து உண்மையான தகவல்களை அறியும் பொருட்டு குழு ஒன்றைஅமைப்பது என்று சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம், சென்னை பிரஸ் கிளப், சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு மற்றும்ஜேர்னலிஸ்ட்ஸ் ஆக்ஷன் குரூப் ஆகிய நான்கு சங்கங்களும் இணைந்து இம்முடிவை எடுத்துள்ளன.
இதன்படி தேர்ந்தெடுக்கப்படும் நிருபர்கள் குழுவினர் கர்நாடகா சென்று, அங்கு சிறையிலிருக்கும்சிவசுப்பிரமணியத்தைச் சந்தித்து, அவர் கைது செய்யப்படுவதற்கு முன் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதுகுறித்து விசாரணை செய்வார்கள்.
இதைத் தவிர இது குறித்து மேலும் சில தகவல்களைப் பெறுவதற்காக தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை மற்றொரு நிருபர்கள் குழு சந்தித்து விவரங்களைத் திரட்ட உள்ளது.
இரு குழுக்களும் தங்கள் அறிக்கைகளை வரும் 8ம் தேதி நடக்கும் கூட்டத்தில் சமர்ப்பித்த பிறகு, அடுத்த கட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் கூறினார்.