மீண்டும் முதல்வராகிறார் ஜெ.
சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசள்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்துமீண்டும் தமிழகத்தின் முதல்வராவர் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மீதான டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளை விசாரித்த தனிநீதிமன்றம் அவருக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும், ஓட்டல் வழக்கில் 1 ஆண்டும் சிறைத் தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும்புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுகூறி தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. இதையடுத்து 4தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்திருந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆனால் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோகவெற்றி பெற்று, தனி மெஜாரிடியுடன் ஆட்சியைப் பிடித்தது. பிறகு கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூடி,ஜெயலலிதாவைத் தங்கள் கட்சியின் சட்டசபைத் தலைவியாகத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தனர்.
இதையடுத்து, அப்போதைய தமிழக கவர்னர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்கும்படிஅழைப்பு விடுத்தார். பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாதுஎன்பதைப் போல, முதல்வராகப் பதவியேற்றதையும் செல்லாது என்று ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கிலும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதையடுத்து, ஜெயலலிதா ராஜினாமா செய்தார். அவருடைய அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகஇருந்த பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார்.
இந்நிலையில் டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள தீர்ப்பைஎதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைநடந்தது.
விசாரணையின் முடிவில் இன்று கூறப்பட்ட தீர்ப்பில், இரண்டு வழக்குகளிலும் ஜெயலலிதா உட்பட குற்றம்சாட்டப்பட்டு தனி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடவும், மீண்டும் முதல்வராகவும் இனி எந்தத் தடையுமில்லை என்றுகூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஆண்டிபட்டி தொகுதி தயாராக உள்ளது. வரும்பிப்ரவரி மாதம் இங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கிருந்து போட்டியிடப் போவதாகவும் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஆனால், போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் முதல்வராவாரா அல்லது இப்போதே முதல்வரா என்பதுதான் தற்போதுதமிழக மக்கள் மனத்தில் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.