பெர்னாண்டஸ் பதவி விலகக் கோரிக்கை
டெல்லி:
பாதுகாப்புத்துறையில் நடந்துள்ள ஊழலுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன.
முன்னதாக தெகல்கா நிறுவனம் வெளியிட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து ஜார்ஜ்பெர்னாண்டஸ் பதவி விலக நேரிட்டது.
கார்கில் ஊடுருவலின்போதும் இவர் தான் அமைச்சராக இருந்தார். அப்போது தான் இந்த சவப் பெட்டி ஊழலும்நடந்துள்ளது. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் நிதியமைச்சருமான மன்மோகன் சிங் கூறுகையில், இது வெட்கக்கேடான செயல். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சேர்ந்து சவப்பெட்டிதிருடர்கள் பதவி விலக வேண்டும், அவமானம்... அவமானம்... நாட்டுக்கே அவமானம் என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டது.