ஸ்ரீரங்கம் கோவில் குளத்தில் முதலை: பக்தர்கள் பீதி
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கோவில் குளத்திற்கு "அழையா விருந்தாளி"யாக வந்த ஒரு முதலை இன்று (திங்கள்கிழமை) பக்தர்களைக்குளிக்க விடாமல் செய்துவிட்டது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கென்று ஒரு குளம் உள்ளது. இக்குளத்தில் குளிப்பதை பக்தர்கள்புனிதமாகக் கருதுகின்றனர்.
இன்று காலை இக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பக்தர் அங்கே ஒரு முதலையும் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
விஷயம் மளமளவென்று பரவியதில் குளத்தில் குளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
சில துணிச்சல் மிக்க இளைஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு முதலையைப் பிடிக்க முயற்சித்தனர். இதற்குள்தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் அந்தக் குளத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த முதலையை வளைத்துப் பிடித்து வாயைக் கட்டிப் போட்டனர்.
சிறிது நேரத்திலேயே அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், முதலையைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.
இந்த முதலை பிடிபட்ட போதிலும் இன்னும் நிறைய முதலைகள் தங்கியிருக்கும் என்று அஞ்சிய பக்தர்கள், அந்தக்குளத்தின் பக்கமே தலை காட்டாமல் குளிக்காமலேயே சென்று கொண்டிருக்கின்றனர்.
இச்சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.