தமிழ் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல: பன்னீர்
சென்னை:
தமிழ் மொழி தனிப்பட்ட ஒருவருக்கு (கருணாநிதி) சொந்தமானதல்ல என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்சென்னையில் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
கண்ணகி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து திமுக நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு போட்டியாக, தமிழக அரசும் இன்றுசென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ் மாநாடு நடத்துகிறது.
இந்த மாநாட்டில் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், சமூகநல அமைப்புகள், மடாதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ்பண்பாடு, தமிழ் வளர்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் கருத்தரங்கும் நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதல்வர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் மாநாட்டில் கூறியதாவது:
தமிழ் மொழி தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமானதல்ல. தமிழர்கள் எல்லோருக்கும் சொந்தமானது. ஒரு மொழிவளர வேண்டுமானால் காலத்திற்கேற்ப அந்த மொழி மாறவேண்டும்.
தமிழ்மொழி மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப மாறி வந்ததால் தான் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும்அறிவியல் முன்னேற்றத்திற்கேற்ப தமிழ்மொழியை மாற்ற வேண்டும்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற துறைகளிலும் தமிழை புகுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழி மேலும் வளர்ச்சியடையும் என்றார்.
திமுகவை சாடும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி கூறுகையில், ஆரவாரங்களாலும்,ஆர்ப்பாட்டங்களாலும் தமிழ்மொழியையும், பண்பாட்டையும் வளர்க்க முடியாது. தமிழ்மொழி வளர்ச்சிக்கானநடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.