சென்னையில் விடுதலைப் புலிகள் பேச்சு நடத்த தமாகா எதிர்ப்பு
சென்னை:விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவக் கூடாது என்று தமாகா சட்டமன்றத் தலைவர்எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதி ஏற்பட, விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவுமாறு இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நார்வேக்குழு நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த உதவுமாறு விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ்காந்தி படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம். அதனால் சென்னையில் தற்காலிகப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட இந்தியா அனுமதிக்கக் கூடாது.
அப்படி அனுமதித்தால் தமாகா கடுமையாக கண்டிக்கும் என்று அவர் கூறினார்.
கருணாநிதி கருத்து:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் வாஜ்பாய் தான் முடிவு செய்யவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது முடிவு இந்திய, இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வதாக இருக்க வேண்டும்.
சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவது பற்றியும் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.வெளிநாடுகளின் பிரச்சனையை பொறுத்தவரை மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் திமுக ஆதரிக்கும்என்றார் கருணாநிதி.