சென்னை மாநகராட்சி கமிஷனரை மாற்ற தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு
டெல்லி:
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் சம்பத்தை மாற்ற வேண்டும் என்றுதமிழக அரசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகதேர்தல் கமிஷனிடம் திமுக புகார் கூறியிருந்தது.
இதையடுத்து தேர்தல் அதிகாரியான கே.ஜே. ராவ் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தி கடந்த 14ம் தேதி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைஒன்றைச் சமர்ப்பித்தார்.
இதையடுத்து அந்த 2 தொகுதிகளிலும் நடக்கவிருந்த இடைத் தேர்தலை தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் நேற்றுஉத்தரவிட்டது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஆண்டிப்பட்டியில் மட்டுமே இடைத் தேர்தல்நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சைதாப்பேட்டையில் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதில் முறைகேடு நடந்ததற்கு முக்கியக்காரணமாக இருந்த சென்னை மாநகராட்சி கமிஷனரான சம்பத்தை உடனடியாக மாற்றும்படி தமிழக அரசுக்குதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக வேறொரு தகுதியான நபரை உடனடியாக நியமிக்கும்படியும் தமிழக அரசுக்குஉத்தரவிட்டுள்ள தேர்தல் கமிஷன், சம்பத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 8தேர்தல் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.