சென்னைக்கு வந்த நியூயார்க் கட்டட இரும்புக் கழிவு
சென்னை:
நியூயார்க்கில் பின்லேடன் கும்பலால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் இரும்புத் துண்டுகள் சென்னைக்கு வந்திறங்கியுள்ளது.
மாலத்தீவைச் சேர்ந்த சரக்குக் கப்பலான ப்ரான்ஸா இதனை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு நிறுவனமான பி.ஈ.சி. இதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கடனுதவியுடன் வாங்கியுள்ளது.
32,920 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த இரும்பை கப்பலில் இருந்து இறக்கவே 3 வாரம் ஆகும் என்று தெரிகிறது. கடந்த கிருஸ்துமஸ் தினத்தன்று இக் கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. அதிலிருந்து இரும்பை இறக்கும் பணி 1ம் தேதி தொடங்கியது. இப் பணி 24ம் தேதி தான் முடிவடையும்.
இது தவிர குஜராத்துக்கும் ஒரு கப்பல் வர்த்தக மையத்தின் இரும்பை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இந்த இரும்பை ஏலம் எடுத்தது. அவர்களிடமிருந்து பி.ஈ.சி. நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இரும்பை பிரித்து விற்பதன் மூலம் பி.ஈ.சி. நிறுவனத்துக்கு கமிஷன் கிடைக்கும்.
கட்டடம் நொறுங்கிய இடத்தில் இருந்து 1 லட்சம் டன் இரும்பும், 2 லட்சம் டன் கான்ங்ரீட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.