வாணியம்பாடி சீட்: ஜெ.வைச் சந்தித்தார் சுலைமான் சேட்
சென்னை:
இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரதுஇல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இது மரியாதை நிமித்தமானசந்திப்பு. சேட்டுடன், கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்திய தேசிய லீக் கட்சியின் துணைத் தலைவர் அப்துல் லத்தீப் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவால் வாணியம்பாடி சட்டசபைத்தொகுதி காலியாகியுள்ளது. அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 21ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போலி வாக்காளர்பிரச்சினை தொடர்பாக தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
வாணியம்பாடி தொகுதியிலும் அதிமுகவே போட்டியிடும் என்று ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் தேசிய லீக் கட்சியினர்அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜெயலலிதாவுடன் பேசுவோம் என சுலைமான் சேட் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவை, சேட் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாணியம்பாடி தொடர்பாகவே அவர் ஜெயலலிதாவைசந்தித்தார் என்று கூறப்படுகிறது.