ராமநாதபுரம் அருகே ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்: 3 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே 157 ஜெலட்டின் குச்சிகளும் 245 டெட்டொனேட்டர்களும் இன்று (புதன்கிழமை) காலைபறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமமான திருப்பாலக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றைமீன் பிடிப்பதற்காக சில மீனவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியான அஷோக் குமார் தலைமையில் இன்று காலை திருப்பாலக்குடியில்திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அந்தக் கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். வேட்டையின் முடிவில் 157ஜெலட்டின் குச்சிகளும், 245 டெட்டொனேட்டர்களும் 18 வயர்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.