பன்னீரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குஇன்று (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியைஆந்திர ஆளுநராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜன் கூடுதலாக வகித்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு டாக்டர் ரங்கராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த ரங்கராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததால்பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவி செல்லாது என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிஉயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த சரவண சதீஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச், அம்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விளம்பர நோக்கத்திற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறியிருந்தனர்.
மேலும், இதற்காக பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட செலவை ஈடுகட்டுவதற்காக அவருக்கு மனுதாரரான சரவணசதீஷ் ரூ.25,000 அபராதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.