ஜெயித்தாலும் தோற்றாலும் தேர்தலை எதிர்த்து வழக்கு: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக ஜெயித்தாலும் தோற்றாலும் அங்கு நடந்த தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்துவழக்கு தொடர்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் போலீசாரை வைத்துதான் வாக்குப்பதிவு நடந்தது. எதிர்க்கட்சிகள் அனைத்துமேபாரபட்சமாக நடத்தப்பட்டன. எதிர்க்கட்சிகளின் ஏஜென்டுகளை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவினரேவாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதுபோன்ற பல அடாவடிச் செயல்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.ஆனால் கைதுக்கான காரணம் தெரியவில்லை.
தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிவதற்கு முன்னரே பதவியேற்பு விழாவுக்காக மண்டபம் ஒன்றை அதிமுகவினர்தயார்படுத்தி வருவதாக பத்திரிக்கைகளில் படத்துடன் செய்தி வந்துள்ளது.
இதிலிருந்தே அவர்கள் தாங்கள்தான் வெற்றிபெறப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துள்ளனர்.அந்த அளவுக்கு ஜனநாயகத்தைக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்த ஜனநாயகக் கொலையை ஆண்டிப்பட்டி மக்கள் அனுமதிக்கிறார்களா இல்லையா என்பது 2 நாட்களில்தெரிந்துவிடும்.
விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் கூறிக் கூறிப் புளித்துப் போய்விட்டது.
வாக்களிக்கத் தேவையான அடையாளம் காண்பிப்பதற்காக 16 ஆவணங்களை ஏற்கனவே பட்டியலிட்ட தேர்தல்கமிஷன், தற்போது கிராம நிர்வாக அதிகாரி சான்று இருந்தால் போதும் என புதிதாக ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.
மேலும் அஞ்சலகத்தில் சிறுசேமிப்புக் கணக்கு இருந்தாலே வாக்களிக்கலாம் என்றவுடன், ஆண்டிப்பட்டிதொகுதியில் ஆயிரக்கணக்கான சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் கள்ள ஓட்டுப் போடுவதற்காகச் செய்யப்படும் ஏற்பாடுகள்தானே? இவற்றை ஆளுநரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ராமமோகன் ராவிடம் நாங்கள் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளோம்.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதுதொடர்பாக நாங்கள் வழக்கு தொடரத்தான் போகிறோம் என்று கருணாநிதி கூறினார்.