திமுகவை ஒழித்து ஆட்சியை பிடிப்போம்: வாழப்பாடி
நாகர்கோவில்:
திமுகவை ஒழித்து விட்டு அதிமுகவுடன் போராடி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து நாகர்கோவிலில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவை ஒழித்து விட்டு ஆட்சியைப் பிடிப்போம் என்று காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் போல் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கும் விருப்பம் உள்ளது. அதற்கு அகிலஇந்திய தலைமை சரியான பாதையை வகுத்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு 3வது அணி அமையாததற்கு இடது சாரி கட்சிகள்தான் காரணம். காங்கிரஸ், பாஜக இல்லாதகூட்டணியில் இருப்போம் என அவர்கள் கூறியதால் இந்த வாய்ப்பு உருவாகவில்லை.
மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றுவது குறித்து மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.தலைவரை மாற்றினாலும் தெளிவான பாதை வேண்டும். அதிமுகவுடன் நெருங்குவதால் காங்கிரஸில் மேலும் ஒருகோஷ்டி உருவாகும் என்பதை ஏற்க முடியாது.
தமாகா தலைவர் வாசன் தன் தகுதியை மீறி பேசி வருகிறார். காங்கிரஸ் வேண்டுமானால் எங்கள் கட்சியில் வந்துஇணையட்டும் என்று அவர் கூறியிருப்பதே இதற்கு உதாரணம். அவருடைய வயது, ஒன்றரை ஆண்டு அரசியல்அனுபவத்தை வைத்து இப்படி பேசுவது சரியல்ல என்று வாழப்பாடி கூறினார்.