பாலயோகிக்கு இரங்கல்: தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மக்களவை சபாநாயகர் பாலயோகியின் மறைவுக்கு இரங்கல்தெரிவித்த பின்னர் தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) தொடங்கியது. அன்று ஆளுநர்ராமமோகன் ராவ் உரை நிகழ்த்திய பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு இன்று மீண்டும் சட்டசபை மீண்டும் கூடியது. கடந்த 3ம் தேதி ஆந்திராவில் ஒரு ஹெலிகாப்டர்விபத்தில் பலியான பாலயோகிக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் உள்பட அனைத்துக் கட்சித்தலைவர்களும் பாலயோகியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் சமீபத்தில் இறந்த வாணியம்பாடி எம்.எல்.ஏவான அப்துல் லத்தீப் மற்றும் அச்சரப்பாக்கம்எம்.எல்.ஏவான செல்வராஜ் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்திலும் அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபையிலும்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தமிழக சட்டசபை உறுப்பினர்கள் கண்டித்தனர்.
இந்திய மண்ணில் எந்த வடிவில் தீவிரவாதம் தோன்றினாலும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரும்தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் இன்றைய அலுவல்கள் ஏதும் நடைபெறாமலேயே தமிழக சட்டசபைஒத்திவைக்கப்பட்டது.