மே இறுதியில் சட்டசபை இடைத் தேர்தல்?
டெல்லி:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிரப்பாக்கம் ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் வரும் மேமாத இறுதியில் இடைத் தேர்தல் நடைபெறலாம் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆண்டிப்பட்டி தொகுதியுடன் சேர்த்து சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரிமாதத்திலேயே தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல்கள்சரிசெய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.
இதற்கிடையே அச்சிரப்பாக்கம் தொகுதி பாமக எம்.எல்.ஏவான செல்வராஜ் இறந்து விட்டதால், அத்தொகுதியும்தற்போது காலியாகவே உள்ளது
.எனவே இந்த மூன்று தொகுதிகளுமே தற்போது தேர்தலுக்குத் தயாராக உள்ளதால், அங்கு மே மாதஇறுதிக்குள்ளாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால்,அதற்கான தேர்தல் நடவடிக்கைகள் ஜூன் மத்தியிலேயே துவங்கப்பட வேண்டும்.
இதனால் அதற்கு முன்னதாகவே இடைத் தேர்தல்கள் அனைத்தையும் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன்திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்திற்குப் பிறகு இடைத் தேர்தலை நடத்த வேண்டும்என்று தமிழக அரசின் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் பறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு, மே 20ம் தேதிக்கு மேல் இடைத் தேர்தலை வைத்துக்கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் இறுதியிலேயே தேர்தல் நடவடிக்கைகள்துவங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.