திருநாவுக்கரசு எம்.பி. ஆனது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திருநாவுக்கரசு வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது.
திருநாவுக்கரசு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி புதுக்கோட்டை தொகுதியில் அவரை எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிங்கார வடிவேல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்கூறப்பட்டிருந்ததாவது:
சென்னை-அண்ணா நகரில் வசித்து வரும் திருநாவுக்கரசுவின் பெயர் இங்குள்ள வாக்காளர் பட்டியலில்தான்உள்ளது. கடந்த 1997 சட்டசபைத் தேர்தலின்போது கூட அவர் இங்குள்ள வாக்காளர் பட்டியலைக் காட்டித்தான்அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, அறந்தாங்கிதொகுதிக்குட்பட்ட தீயத்தூர் கிராமத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தன் பெயர் உள்ளதாக வேட்பு மனுவில்திருநாவுக்கரசு கூறியிருந்தார்.
ஒருவருடைய பெயர் இரண்டு இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மக்கள்பிரதிநிதித்துவச் சட்டம் 18, 19 மற்றும் 20வது பிரிவுக்கு எதிரானது.
எனவே புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திருநாவுக்கரசு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும். அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் சிங்கார வடிவேல்கூறியிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் முன் வந்தது. பின்னர் அவர்அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
ஒரே நபரின் பெயர் இரண்டு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதுகுறித்துசம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதுகுறித்து அந்த அதிகாரிதான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்தலில் முறைகேடு, தேர்தலில் நிற்கத் தகுதியின்மை போன்றபல்வேறு காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றதை ரத்து செய்ய முடியும் என்று ஏற்கனவேஉச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறேன் என்று நீதிபதி ஞானப்பிரகாசம் தன் தீர்ப்பில்கூறியிருந்தார்.