புதுவையில் கண்ணப்பன் கட்சி காங்கிரசில் இணைந்தது
பாண்டிச்சேரி:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தமிழகப் பிரிவு அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ள நிலையில் அக்கட்சியின்பாண்டிச்சேரி பிரிவு, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், மக்கள் தமிழ்தேசம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து இந்தக் கட்சி போட்டியிட்டாலும், அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச்சந்தித்தது.
தேர்தலுக்குப் பிறகு திமுக அணியிலிருந்து விலகுவதாக அறிவித்த கண்ணப்பன், சிறிது காலத்திற்கு அமைதியாகஇருந்தார். இந்நிலையில், தனது கட்சியை அதிமுகவுடன் இணைக்கப் போவதாக அறிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், பாண்டிச்சேரி பிரிவு மக்கள் தமிழ் தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளது.
இதுதொடர்பாக பாண்டிச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி,மக்கள் தமிழ் தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் அசோக் ஆனந்த் கையெழுத்திட்டார்.