மின்வெட்டு தொடராது: அமைச்சர் உறுதி
சென்னை:
தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு தற்காலிகமானது தான். இன்னும் 10 நாட்களில் அது சரி செய்யப்படும்என்று தமிழக சட்டசபையில் மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அறிவிக்கப்படாமல் மின் வெட்டு ஏற்படுவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
வடசென்னை மின் நிலையத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவிலுள்ள கெய்கா மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரமும், கேரளாவில் உள்ளகாயன்குளம் மின் நிலையத்திலிருந்து 120 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.மேலும் ஆந்திராவிடமும் 50 மெகாவாட் மின்சாரம் கேட்டுள்ளோம்.
இவை தவிர மத்திய மின்துறை அமைச்சர் சுரேஷ் பாபுவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசிய போது அவர்தமிழகத்திற்கு 335 மெகாவாட் மின்சாரம் அதிகமாக தருவதாக உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஏற்படும் மின்வெட்டு தற்காலிகமானது தான். இன்னும் 10 நாட்களில் அது சரி செய்யப்படும்.
தமிழகத்தில் இப்போது 6,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதையதேவை 6,750 மெகாவாட்டாக இருப்பதால் தான் இந்த பிரச்சினை.
இன்னும் சில நாட்களில் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை தமிழகமே தயாரிக்கும் என்றார் நயினார்நாகேந்திரன்.