சென்னையோடு விளையாடும் இயற்கை
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் கடுமையான காற்று வீசியது. குளிர்ச்சியான காற்று வீசியதால் சென்னை மக்கள்வெயில் புழுக்கத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற்றனர். ஆனால், இன்று காலையிலேயே மிகக் கடுமையான வெயில் வீசஆரம்பித்துவிட்டது.
தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சென்னை, சேலம், திருச்சி நகர மக்கள். தினசரி 40 டிகிரி வெப்பத்தை தாங்கிவருகின்றனர். சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 42 டிகிரி வெயில் அடித்தது.
இதனால் பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
அனல் காற்றினால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இரவு 10 மணிக்கு மேல்பலத்த காற்று வீசியது. கடுமையான சூறாவளிக் காற்று போல அது இருந்தது.
குளிர்ச்சியான காற்று வீசியதால் சென்னை மக்கள் பெரும் நிம்மதியில் ஆழ்ந்தனர். ஜன்னல்களை திறந்து வைத்து காற்றை வரவேற்றனர்.கடுமையான குளிர் காற்று காரணமாக, வெயில் புழுக்கம் தணிந்து குளுமை நிலவியது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் இந்த திடீர் குளுமை ஏற்பட்டதாக வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கடும் வெயில்:
இந் நிலையில் இன்று காலையிலேயே மிகக் கடும் வெயில் அடித்து வருகிறது. பகல் 12.30 மணிக்கே இந்த வெயில்109 டிகிரியை எட்டிவிட்டது.
வெயிலுக்கு பலியான குதிரை:
நேற்றும் இதே போன்ற கடும் வெயில் வீசியது. 110 டிகிரி வெயிலுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் மக்களை மகிழ்வித்து வந்த குதிரை ஒன்று சுருண்டுவிழுந்து இறந்தது.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரீனா கடற்கரைக்கு வருபவர்களை மகிழ்விப்பதற்காக பல குதிரைகள் உள்ளன. இவற்றில் ஜாலிரைட் செல்வார்கள். இப்படிப்பட்ட ஒரு குதிரை வெள்ளிக்கிழமை பரிதாபமாக இறந்தது.
கடுமையான வெயில் காரணமாக அந்தக் குதிரை களைத்துப் போய் இருந்தது. இருப்பினும் அதன் உரிமையாளர் வருமானத்தைக் கருத்தில் கொண்டு, குதிரைக்குஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து ஓட்டி வந்தார்.
இதனால் குதிரை சுருண்டு விழுந்து மயங்கியது. வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. இதுகுறித்து புளூ கிராஸ் அமைப்புக்கும், கால்நடை மருத்துவமனைக்கும்தகவல் தரப்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் வரத் தாமதம் ஆனதால் குதிரை பரிதாபமாக இறந்து விட்டது.
இதுகுறித்து புளூ கிராஸ் அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஜெயசங்கர் கூறுகையில், எங்களது தரப்பில் தாமதம் ஏற்பட்டு விட்டதை ஒப்புக் கொள்கிறேன்என்றார்.