அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க வாஜ்பாய் விருப்பம்
டெல்லி:
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.சி. அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்கும் முயற்சிகளில் பிரதமர் வாஜ்பாய்ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தி வருகிறார்.
தெலுங்கு தேசம் தவிர பிற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பி.சி.அலெக்சாண்டருக்கு ஆதரவு தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் கூறியுள்ளது.
இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி தவிர்க்க முடியாததாகும் என்று தெரிகிறது.
நாராயணனைப் போலவே அலெக்சாண்டரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். இவரும் நாராயணனைப்போலவே ஐ.எப்.எஸ். அதிகாரி தான். இருவரும் கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுளில் இந்தியத் தூதாகப் பணியாற்றிய அலெக்சாண்டர் முன்னாள் பிரதமர்இந்திரா காந்தி, ராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.
தமிழக ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் மிகுந்த நட்புறவுடன் இருந்தார்.தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிக் காட்டினார். மிகச் சிறந்தஆளுநர்களில் இன்றும் அதிகார வட்டாரத்தில் நினைவு கூறப்படுபவர் அலெக்சாண்டர்.
பின்னர் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம் மாநிலத்தில் பவார் தலைமையிலான காங்கிரஸ்ஆட்சியிலும், சிவசேனை அரசுடனும் எந்தவிதமான மோதலும் இன்றி செயல்பட்டுள்ளார். சிவசேனைத் தலைவர்பால்தாக்கரேயின் அன்பையும் பெற்றுள்ளார்.
அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவரே பால்தாக்கரே தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் முக்கிய பிரச்சனைகளில் அலெக்சாண்டருடன் பிரதமர் வாஜ்பாய்கலந்து ஆலோசித்தே முடிவெடுத்துள்ளார். அந்த அளவுக்கு வாஜ்பாயின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.அலெக்சாண்டர் எனது ராஜகுரு என்று வாஜ்பாயே ஒரு முறை குறிப்பிட்டுளார்.
முதலில் காங்கிரசுக்கு நெருக்கமானவராக இருந்த அலெக்சாண்டர் கடந்த 10 ஆண்டுகளாக அக் கட்சியிடம்இருந்து விலகிவிட்டார். இப்போது பா.ஜ.கவுடன் அவர் நெருக்கமாக உள்ளதால் காங்கிரஸ் அவரைஜனாதிபதியாக்க விரும்பவில்லை.
இதனால் நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், ஆளும் கூட்டணியும் காங்கிரசும் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுத்தால் மட்டுமே மீண்டும்போட்டியிடுவேன் என்று நாராயணன் கூறிவிட்டதாகத் தெரிகிறது. ஆளும் பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும்வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார்.
பா.ஜ.க. அரசின் பல பிரச்சனையான திட்டங்களை நாராயணன் நேரடியாகவே குறை கூறியுள்ளார். குஜராத்விவகாரத்தில் மத்திய அரசு மீது தனது வருத்தத்தை தெரிவித்துவிட்டார். மேலும் தலித்கள் மேம்பாட்டுக்கு பா.ஜ.க.அரசு முக்கியத்துவம் தரவில்லை என்பதை குடியரசு தின உரையிலேயே இடித்துக் காட்டினார் நாராயணன்.
அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லை. இதனால் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க பா.ஜ.க.விரும்பவில்லை.
அதே நேரத்தில் குஜராத் கலவரத்தால் பா.ஜ.கவின் பெயர் நாறிப் போய் உள்ளது. அக் கட்சி சிறுபான்மையினருக்குஎதிரானது என்ற அவப் பெயரை தாங்கி நிற்கிறது. கிருஸ்தவரான அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்குவதன் மூலம்இந்த கெட்ட பெயரை ஓரளவுக்கு துடைக்குக் கொள்ள முடியும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்கும் முயற்சிகளுக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தந்துவிட்டதாகத் தெரிகிறது. ஜனாதிபதிக்கான பெயரை இறுதி செய்வதற்கான உரிமையைகடந்த வாரம் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் அலெக்சாண்டரின் பெயரை கூட்டணிக் கட்சிகளிடையே உலவ விட்டுள்ளார்.
ஆனால், கூட்டணியை வெளியில் இருந்து ஆதரித்து வரும் தெலுங்கு தேசம் ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் தனதுகருத்தை இன்னும் தெரிவிக்கவில்லை. நாயுடு தான் ஆந்திராவைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த்தை துணைஜனாதிபதியாக்கினார். மீண்டும் அவரையே துணை ஜனாதிபதியாக்க பா.ஜ.க. ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்அலெக்சாண்டரை ஆதரிப்பார் என்று தெரிகிறது.
தெலுங்கு தேசத்தின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட சரத் பவார் போன்ற எதிர்க் கட்சியினரின் ஆதரவும்அலெக்சாண்டருக்கு உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார் வாஜ்பாய். மகாராஷ்டிரத்தில் முதல்வராகஇருந்த பவாருக்கும் ஆளுநர் அலெக்சாண்டருக்கும் இடையே எந்த மோதலும் ஏற்பட்டதில்லை என்பதுகுறிப்பிட்தக்கது.
இந்த விவகாரத்தில் அலெக்சாண்டருக்கு வைகோ முழு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தச்சமுதாயத்துக்கு (கிருஸ்தவர்களுக்கு) நாட்டின் மிகப் பெரிய பதவி இதுவரை கொடுக்கப்பட்டதில்லை. இந்தக்குறையைப் போக்கும் வகையில் அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.
ஒரு வேளை காங்கிரஸ் கோரிக்கையை ஏற்று அலெக்சாண்டரை எதிர்த்து நாராயணன் போட்டியிட்டால், மிகவும்தர்மசங்கடத்துக்கு உள்ளாகப் போவது கலைஞர் தான்.
அலெக்சாண்டருடன் கலைஞருக்கு மிகச் சிறந்த நட்பு உண்டு. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அதீதமரியாதை கொண்டவர்கள்.
அதே வேளையில் கே.ஆர். நாராயணனின் மிகுந்த அன்பைப் பெற்றவர் கருணாநிதி. அவரைஜனாதிபதியாக்கியதில் மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் பெரும் பங்கு உணடு.
இந்த இருவரும் போட்டியிட்டால் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்வது கருணாநிதிக்கு மிகுந்தஎமோஷனலான விவகாரமாகத் தான் இருக்கும்.
ஆனால், அப்படிப்பட்ட நிலை வர வாய்ப்பு மிகக் குறைவுதான். எல்லோரும் சேர்ந்து தன்னைத்தேர்ந்தெடுக்காவிட்டால் ஜனாதிபதி பதவியில் இருந்து அமைதியாக ஓய்வு பெற்றுவிடவே விரும்புவதாகநாராயணன் கூறி வருகிறார்.
அந்த நிலையில் அலெக்சாண்டரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வேறு ஒருவரை சோனியா நிறுத்தலாம்.
தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற ஆளும் கூட்டணியில் உள்ள அதிருப்திகட்சிகளை சோனியா வளைத்துவிட்டால் அவர் நிறுத்தும் நபர் தான் அடுத்த ஜனாதிபதியாக முடியும்.
காரணம் ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு உள்ள பலம். இது தவிர 14 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருவதால் அதிகஅளவிலான எம்.எல்.ஏக்களையும வைத்துள்ளார்.
இவர்கள் வாக்களித்துத் தான் ஜனாதிபதியைத் தேர்வு செய்யப்படுவார்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி தவிர்க்க முடியாதது ஆகி வருகிறது.