இந்தியாவில் தடை நீடிப்புக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்தியா நீடித்துள்ளது அர்த்தமற்ற முடிவு என்றுபுலிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:
புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா 2 வருடங்களுக்கு நீடித்துள்ளது. எந்த காரணமும் இன்றி இந்தியா இவ்வாறு தடைநீடித்திருப்பது அர்த்தமற்ற, தவறான முடிவு. புலிகள் மீதான தடையை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும், இலங்கைத்தமிழர்களின் அரசியல் ஆசைகள் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும்.
எங்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு, இலங்கை பிரதமர் முன்பு போல் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். போர் நிறுத்தநிபந்தனைகள் அனைத்தையும் அவர் ஏற்க முன்வர வேண்டும். மேலும் ராணுவத்தை அவர் அடக்கி வைக்க வேண்டும்.
இலங்கையுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை, மூன்றாவது நபரின் மேற்பார்வையில் நடக்க வேண்டும். திட்டமிட்டபடி தாய்லாந்தில்பேச்சுவார்த்தை நடக்குமா என்பதை இலங்கை அரசு தான் அறிவிக்க வேண்டும். அவர்களது முடிவை பொறுத்து தான் பேச்சு வார்த்தைதொடங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.