காஷ்மீரில் கொல்லப்பட்ட திருச்சி வீரர்: குடும்பத்துக்கு தமிழக அரசு உதவி
திருச்சி:
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட தமிழக வீரர் முருசேகனின் உடல் இன்று இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது.
ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் பிரிவில் சிப்பாயாக பணியாற்றி வந்தவர் முருகேசன். ஜம்மூ அருகேஇந்திய-பாகிஸ்தான் எல்லையில் கொப்பல்வாதா என்ற இடத்தில் ராணுவ கண்காணிப்பு முகாமில் இருந்தமுருகேசன் தீவிரவாதிகள் தாக்கி இறந்தார். இச் சம்பவம் கடந்த 14ம் தேதி நடந்தது.
இவரது வயதான பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோர் கருமலை மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்துவருகின்றனர். 29 வயதான முருகேசனுக்கு திருமணம் முடித்து வைக்க பெண்ணும் பார்த்து நிச்சயம் செய்துவைத்திருந்தனர். இந் நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
மறைந்த முருகேசனின் உடல் இன்று பிற்பகல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மணிவாசன், ராணுவத்தின் 117வது இன்பாண்ட்ரியின்திருச்சி ஸ்டேசன் கமாண்டர் கலோனல் மோகி, உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் முருகேசனின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவமே அவரது உடலை சொந்தஊரான கருமலை மேட்டுப்பட்டிக்குக் கொண்டு சென்றது.
தமிழக அரசு உதவி:
இறந்த வீரர் முருகேசனின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குஅரசு வேலை தரவும் உத்தரவிட்டுள்ளார்.
முருகேசனின் இறுதிச் சடங்கில் அரசின் சார்பில் மாவட்ட கலெக்டரும் காவல்துறை எஸ்.பியும் கலந்து கொள்வர்என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.