மேட்டூர் நீர் "மளமள"வென குறைவு: விவசாயிகள் கவலை
சென்னை:
மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருவதால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பெரும்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி டெல்டாப் பாசனப் பகுதியில் விரைவில் குறுவை நெல் சாகுபடி தொடங்கவுள்ளது. சாகுபடிக்கு இன்னும் 18நாட்களே உள்ள நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
அடுத்த சில நாட்களில் இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மே மாதக் கடைசிக்குள் வந்து சேரவேண்டிய 205 டி.எம்.சி. தண்ணீரை இன்னும் முழுமையாகக் கர்நாடக அரசு தரவில்லை என்று பொதுப்பணித்துறைஅமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியுள்ளார்.
தற்போது மழையும் பெய்யாததால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைத் திறந்து விடுவதில் பெரும்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசிடம் உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துதண்ணீரைப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இல்லாவிட்டால் குறுவைசாகுபடியைத் தொடங்க முடியாமல் போய் விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.