குஜராத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது: 2 பேர் பலி
கோத்ரா:
குஜராத்தின் கோத்ரா நகரில் நேற்றிரவு மீண்டும் வன்முறை வெடித்ததில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுகாரணமாக 2 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.
கடந்த பிப்ரவரி 27ம் தேதி இதே கோத்ராவில் உள்ள ரயில் நிலையத்தில் தான் 58 ராம கர சேவகர்கள் 4 ரயில்பெட்டிகளோடு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து தான் குஜராத்தில் இரண்டுமாதங்களுக்கும் மேலாக வன்முறை தாண்டவமாடியது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகரான பஞ்சாப் மாநிலமுன்னாள் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து குஜராத் வன்முறை முழுவதுமாகக்கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சுமார் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த குஜராத்தில் நேற்று நள்ளிரவில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது.
கோத்ராவின் ஜுகார்புரா பகுதியில் ஒரு வன்முறைக் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை திடீரென்று வீசித் தாக்கியது.இதையடுத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.
தொடர்ந்து வன்முறைக் கும்பல் கல்லெறிச் சம்பவத்திலும் ஈடுபட்டது. சம்பவத்தைக் கேள்விப்பட்டு விரைந்து வந்தபோலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறைக் கும்பலைக் கலைக்கமுயற்சித்தனர்.
ஆனாலும் நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சிறுபான்மை இன முஸ்லீம்கள் என்று தெரிய வந்துள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள்இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு மாத வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அகமதாபாத்தின் கோம்திபூர்பகுதியிலும் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்லெறிச் சம்பவத்தில் இரண்டு பேர்காயமடைந்தனர்.
இந்நிலையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் இன்று கில்லைச் சந்தித்து நிலைமை குறித்து விளக்கினர்.