திருமணமான 5வது நாளில் போர் முனைக்குப் புறப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ராணுவ வீரர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்தேவன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனக்குத்திருமணமான 5வது நாளே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காஷ்மீர் எல்லைக்குப் புறப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்தேவன்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார்500 குடும்பங்கள் உள்ளன. இங்கு எப்போதுமே வீட்டுக்கு குறைந்தது ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார்.
அந்த வகையில் 400க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டு விளங்குகிறது பெருமாள்தேவன்பட்டி.இதனால் இந்தக் கிராமம் "ராணுவ கிராமம்" என்றே அழைக்கப்படுகிறது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற ராணுவ வீரருக்குக் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் எல்லையில் தற்போது பெரும் பதற்றம் நிலவுவதையடுத்து எப்போது வேண்டுமானாலும்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் முத்துக்கிருஷ்ணன் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அவருக்கு அவசரத் தந்தி வந்தது.இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும் உடனடியாக எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திருமணமான ஐந்தாவது நாளன்றே போர் முனைக்குக் கிளம்புவது குறித்துக் கவலைப்படவில்லை என்று கூறியமுத்துக்கிருஷ்ணன், நாட்டிற்காகப் போரிடச் செல்வதை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாகவும் தன்னுடையமனைவியும் தன்னை முழு மனதோடு வாழ்த்தி அனுப்புவதாகவும் கூறினார்.