புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எரித்து வீசிய தந்தை
மதுரை:
புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து அதை பாதி எரித்து பஸ்சில் போட்டுவிட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த நபரின் மனைவிக்கு 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பெண்குழந்தை என்பதால் அதை சரியாக கவனிக்கவில்லை. இதனால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை புதன்கிழமை இறந்தது. மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்து வந்த பின் அந்தக்குழந்தையின் உடலை திருமங்கலத்தில் எரிக்க தந்தை எதிர்ப்பு தெரிவித்தார்.
தனது சொந்த ஊரான நெடுங்குளத்தில்தான் எரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அவரது மனைவி அதை ஏற்கவில்லை, தனது சொந்த ஊரான திருமங்கலத்தில்தான் புதைக்க வேண்டும் என்று கூறினார். எரிக்கக்கூடாது என்று கூறினார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்துசென்றுவிட்டார். அவர் போன பின் திருமங்கலத்தில் வைத்து குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட அந்தத் தந்தை ஆத்திரமடைந்து இரவில் சுடுகாட்டுக்கு போனார். அங்கு புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின்பிணத்தை மீண்டும் தோண்டியெடுத்த அவர் தீவைத்து எரித்தார்.
பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த சிசுவின் உடலை திருமங்கலம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நெடுங்குளம் செல்லும் பஸ்சில்போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நேற்று காலை பஸ்சை சுத்தம் செய்ய வந்தவர்கள் பாதி நிலையில் எரிந்து கிடந்த குழந்தையின் உடலைப்பார்த்து அதிர்ந்தனர்.